14 மார்ச் 1985
மேன்மை பொருந்திய திரு முதல் அமைச்சருக்கு , வீடு இலவசமாகத் தந்ததற்கு நன்றி . இதை என் எழுத்துக்கு மதிப்பளித்து தந்திருந்தாலும் , என் ஊனத்தை கருத்தில் கொண்டு தந்திருந்தாலும் , இது பிச்சை தான். பிச்சையாக இருந்தாலும் எனக்கு இது தேவை. என் வறட்டு கௌரவத்தை , கூட் ரோடு ஜங்ஷன் குப்பைத் தொட்டியில் , தூக்கி எறியப்பட்ட என் புத்தகங்கள் தகர்த்துவிட்டன . . எச்சை இலையாக இருந்தாலும் நக்கித் தின்னும் நிலை என்னுடையது.
நன்றி !
பி.கு இந்த வீடு என் ஊனத்திற்கான சன்மானம் இல்லை என்று இரண்டாம் மாடி வீடு சொல்லிவிட்டது .
கால்கள் இல்லாதவனுக்கு மாடி வீடு தந்த நீர் வாழ்க !
***
1999 - டிசம்பர்
”என்னை காசியில் கொண்டு விட்டு விடுங்கள்” என்று கதறிக் கொண்டே எழுந்தேன். மலை உச்சியில் இருந்து பறந்து வந்து விழுந்ததைப் போல உடல் வலித்தது . கழுத்தில் இருந்து முழு உடலும் உஷ்ணமாவாதை உணர முடிந்தது. இதயம் வேகமாகத் துடித்தது. பட்டென்று எழுந்து அங்கிருந்து நடந்து செல்ல வேண்டும் என்று நினைத்தேன் . வழுவழுப்பான கால்கள் இல்லாத முட்டி, வேண்டாம் , உன்னால் முடியாது என்றது. இருட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி என் கண்களுக்கு வெளிச்சம் தந்தது .
படுக்கையை தொட்டுப் பார்த்துக் கொண்டேன். இன்னும் இந்த உலகில் தான் இருக்கிறேன். முதுகு நனைந்து சட்டையுடன் ஒட்டி இருந்தது. அதை மாற்றி விடு என்று மனது ஆணையிட்டாலும், அதுவே மற்றவருக்கு சிரமம் என்று மறுக்கவும் செய்தது.
அன்றைய தினத்துக்கான துவந்த யுத்தம் இப்படியாகத் தொடங்கியது.
மனைவியும் குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பி, சட்டை மாற்றச் சொல்வது, அதர்மம். கொஞ்ச நேரத்தில் காய்ந்து விடும் , விட்டு விடுவோம் என்று சுய சமாதானம் செய்து கொண்டேன் . சுய சமாதானங்கள் தான் , வாழ்க்கை என்றான பிறகு , நான் எதற்கும் நிமிர்ந்து ஸ்திரமாக நிற்பதில்லை .
நா வறண்டு போயிருந்தது . கனவில் நடந்ததன் சுமையாக இருக்கலாம் . இப்போதெல்லாம் கனவிலிருந்து வெளி வர சில மணி நேரங்களாவது ஆகிறது .
தலையணைக்கு அருகில், மனைவி எடுத்து வைத்திருந்த சொம்பில் தண்ணீர் குடித்து ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். சொம்பின் நசுங்கிய விளிம்புகள் , பழைய கதைகளையும், என் ஆற்றாமைகளையும் நினைவுபடுத்தின. இவற்றையெல்லாம் ஏன் மறக்க முடியவில்லை ? எதைப் பற்றி யோசிக்க வேண்டாம் என்று நினைக்கிறேனோ அதைச் சுற்றியே அந்த நாள் நகர்கிறது. நாட்கள் வாரமாகிறது , வாரங்கள் வருடங்கள் ஆகியும், இவை மட்டும் பசை போல மனதில் ஒட்டிக் கொண்டு , அகல மறுக்கிறது.
இன்றும் அதே கொடுங்கனவு. பரந்த செம்மண் பாலைவனத்தில், உச்சி வெயிலில், நிழலின்றி ஆயிரக்கணக்கான அழுக்கு செம்மறி ஆடுகள் நிற்கின்றன. அவற்றின் மத்தியில் ஒரு கருப்பு ஆடு. வளைந்து நேர் கொள்ளாத பெரிய கொம்புகள் . அடர்ந்த மஞ்சள் கண்களுடன் என்னைப் பார்த்து , “இன்னும் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? பறந்து வா” என்று அழைக்கிறது.
“நொண்டியாக இன்னும் எத்தனை நாள் , மற்றவருக்குத் துன்பம் தரப் போகிறாய்? . அதோ அந்த நதியில், என் கையைப் பிடித்து இறங்கு. உனக்கு கால்கள் தருகிறேன். பறக்க இறக்கைகள் தருகிறேன் , மீன்களைப் போல துடுப்புகள் தருகிறேன் , நாம் இருவரும் மிதந்தே இந்த யுகத்தின் முடிவிற்கு செல்வோம், வா “ என்று பள பளப்பான எதிர்காலத்தைக் காட்டி இம்சிக்கிறது. நான் பதில் தராமல் எதிர் திசையில் நடக்க முயல, அந்தக் கருப்பு ஆடு ஒவ்வொரு செம்மறி ஆடாக பிடித்து கழுத்தை அறுத்துக் கொல்கிறது. சூரியன் சிவப்பாகிறது, ரத்தம் ஆறாக ஓடி, என் கால்களை நனைக்கறது. செம்மன் சகதியாகிறது . கால்கள்! ஆம் ! என் கால்கள். கட்டை விரல் ரத்த ஆற்றின் ஆழத்தில் புதையப் பார்க்கிறது. அது அப்படியே என்னை இழுக்க ஆரம்பிக்க, அந்த கருப்பு ஆடு நதியைப் காட்டிச் சிரிக்கிறது . அந்தக் கருப்பு ஆட்டின் மூச்சு இன்னும் என் கழுத்தருகில் பட்டுச் செல்கிறது . தலையை சிலுப்பி கனவின் நிழலில் இருந்து வெளியே வந்தேன் .
எதிரில் இருந்த சிவப்பு பார்டர் கொண்ட கடிகாரம் , சத்தமில்லாமல் மணி நான்கு எனக் காட்டியது . அசைவின்றிக் கிடக்கும், திடப் பொருளான அந்தக் கடிகாரத்தின் முட்கள் ஏனோ எனக்கு கால்கள் இல்லை என்பதைக் குத்திக் காட்டுவதாகத் தோன்றியது. நொடிக்கு நொடி அது அளக்கும் தூரத்தைக் கூட சில நாட்களில் நான் கடப்பதில்லை. பல நேரங்களில் , மனிதர்கள் தான் , தெரிந்தோ தெரியாமலோ குத்திக் காட்டுகிறார்கள் என்றால் திடப் பொருட்களும் அப்படிதான் போல . அதை அடித்து நொறுக்கி , அதன் முட்களை குப்பையில் போட்டு விட்டு , அந்த கடிகாரத்திடம் “எங்கே இப்போது உன் முட்களை நகர்த்தி மணி காட்டு பார்க்கலாம்” என்று கேட்கத் தோன்றுகிறது.
அருகில் இருந்த கட்டிலில் மூத்த மகன் முனகலுடன் அங்கும் இங்கும் புரண்டபடி படுத்துக் கிடந்தான் . நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடி விட்டு , கால் வலிக்கிறது , ரெக்கார்ட் நோட்டு முடிக்க வேண்டும் என்று புலம்பிக் கொண்டே எழுதி முடித்தான் . அசதியில் அப்படியே தூங்கி விட்டான் . பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு அவன் மனதில் கிலியை உண்டு செய்ய ஆரம்பித்திருப்பது அவன் ரெக்கார்ட் நோட்டை முடிக்கும் நேர்த்தியில் தெரிந்தது . அவன் கால்களை அமுக்கி விட்டு அவனின் இந்த ஒரு சுமையைத் தீர்க்க வேண்டும் போலிருந்தது. பகலில் கேட்டால் விட மாட்டான் .
கட்டில் பக்கத்தில் தான் இருந்தது. இருந்தும் அதன் மேல் இருக்கும் அவன் கால்களைத் தொட எனக்கு கால் மணி நேரம் ஆனது . நத்தை கூட கொஞ்சம் வேகமாக ஊர்ந்து சென்றிருக்கும் . எக்காரணம் கொண்டும் சத்தம் வந்து விடக்கூடாது . தப்பித் தவறி , சிறியவள் எழுந்து, கைகளை ஊன்றி , ஊர்ந்து செல்லும் என்னைப் பார்த்து அலறி விட்டாள் ? அவள் நாள் வீணாகி விடும், அதுவே அவள் மனதில் ஆறாத ரணமாக மாறக் கூடும். ஏற்கனவே என் அருகில் வர அவள் பயப்படுகிறாள். காலில்லா நாயை எந்தக் குழந்தைக்குத்தான் பிடிக்கும்.
பெரியவன் கட்டிலின் கீழேயே ரெக்கார்ட் நோட்டு புக்கைப் போட்டு வைத்திருந்தான் . அதை நகர்த்தி விட்டு அவன் கால்களை வருடி விட்டேன் . திரண்ட சதை கொண்ட கால்கள் . என்னிடம் இல்லாதது அவனிடம் இருக்கிறது என்ற நினைப்பு வந்தது. என்னை நானே கடிந்து கொண்டேன். சே எப்படிப் பட்ட ஜென்மம் நான் . என் ரத்தம் அவன் , அவனிடமா என் ஆற்றாமையைக் காட்டுவது . என் கேவலப் பிறவி என்னோடு முடிந்து போகட்டும் , இவர்களுக்குக் கால்கள் உண்டு, இவர்கள் பிழைத்துக் கொள்ளட்டும் .
அவனைப் பார்த்தபடி , கட்டிலில் இரண்டு கைகளை வைத்து, தொங்கியபடி அவன் கால்களை அமுக்கி விட்டுக் கொண்டிருந்தேன் . மகள் முனகும் சத்தம் கேட்டது. மனதிற்குள் யாரையோ திட்டிக் கொண்டிருந்தாள் . அசையாமல் அப்படியே நின்றேன் , சடாரென என் மகனின் கால்கள் சப்பையாக மாறின. அது அந்தக் கருப்பு ஆட்டின் கால்கள் . அது வளர்ந்து கொண்டே என்னை நோக்கி எழுந்து வந்தது . வாயை அகலமாக பிளந்து என்னை விழுங்க முயல, அப்படியே கீழே விழுந்துவிட்டேன்.
விழுந்ததில் என் மூத்திரப் பை பிய்ந்து விட்டதைப் போலத் தோன்றியது .. கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடம் ஈரமானது. கைகளை வைத்து அவற்றை வேறு திசைக்கு திருப்ப முயன்றேன். போர்வையை வைத்து ஈரத்தை துடைக்க முயல, அது வேறொரு பக்கம் ஆறாக மாறி சீறிச் சென்றது . அது என் மகன் அரும்பாடு பட்டு உழைத்த ரெக்கார்ட் நோட்டை நோக்கி சென்றது . நகர முடியாமல் நொண்டிச் சிலையாக நான் , அசைவற்றுக் கிடந்தேன் . அப்படியே முகத்தில் அடித்துக் கொண்டு அழ வேண்டும் போல இருந்தது .
பரிபூரண இருள் என்னைச் சூழ்ந்தது .
****
கண் முழித்தால் காலையா மாலையா என்ற சந்தேகம் வந்தது. வீடு களேபரமாக இருந்தது. தூரத்தில் மகன் கத்திக் கொண்டிருப்பது கேட்டது. என்னை என் அறையில் கொண்டு விட்டிருந்தார்கள். நேரம் அறிய மனம் திண்டாடியது,.இந்த அறையில் கடிகாரம் கட்டாமல் விட்டிருந்தார்கள். இவன் மணி பார்த்து என்ன செய்யப் போகிறான் என்ற நினைப்பாக இருக்கலாம், அதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. நொண்டிக் குதிரைகளுக்கு ஏதோ ஒரு மாமிசக் கத்தி காத்திருக்கத் தானே செய்கிறது . அது என்னிடம் வரும் நாள் அருகில் தான் எனத் தோன்றியது.
ஜன்னல் ஓரம் படுக்கை, வேலைக்கு காபி, டிபன் வந்துவிடும், கேட்டது அனைத்தும் கிடைக்கும் . ஆனால் இது ஒரு சிறை. இந்த அறையில் என்னை யாரும் வந்து பார்க்க மாட்டார்கள். மகளுக்கு ஏற்கனவே என் மேல் பயம். எங்கே தன் கால்களும் அப்படியே ஆகிவிடுமோ என்ற பயமாக இருக்கலாம் . அவள் அம்மாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள், ம்ம்ஹும் . மகனுக்கு படிப்பு, கிரிக்கெட். ரேங்க் கார்டில் கூட அம்மாவின் கையெழுத்து போதும். ஆனாலும் நான் கீழே விழுந்தாலோ , என்னை குளிக்க வைக்கவோ அவன் வேண்டும். அவனில்லாமல் நகராது என் உடல்.
மனைவி, காலில்லாத என்னை கல்யாணம் செய்ய முடிவெடுத்த அந்தத் தருணத்தில் இவ்வளவு பிரச்சினைகளை யோசித்திருப்பாளா என்று தெரியவில்லை. தெரிந்தே கயிறில்லாமல் ஆழ்துளைக் கிணற்றில் இறங்கும் சாகசம் அவளுக்குப் பிடித்திருக்கலாம். ஒற்றைவழிப் பாதை என்று தெரிந்து, அவள் கண் கட்டி நடக்க ஆரம்பித்து இருபது வருடங்கள் ஓடி விட்டன. ஒரு நாள் கூட உச்சுக் கொட்டாமல் அவள் எனக்கு செய்யும் எல்லாவற்றுக்கும் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. அவள் கால் இல்லாமல் இருந்து நான் மனந்திருந்தால் இந்நேரம் கோடி முறை உச்சுக் கொட்டியிருப்பேன்.
கடந்த சில வருடங்களாகவே பத்திரிக்கைகளும் வார இதழ்களும் எனக்கு வாய்ப்புத்தருவதை நிறுத்தி விட்டன . என் மீதான நொண்டிக் கரிசனத்தரிக்கான காலாவதித் தேதி வந்து விட்டதாகவே தோன்றியது. ஏதோ இதுவரை போட்ட இருபத்தி மூன்று புத்தகங்கள் சுமாரான வருமானத்தை தந்து வந்தன . அதற்கும், அவள் சென்று , பதிப்பரின் சட்டையைப் சட்டையைப் பிடித்து சண்டையிட வேண்டும். அவளும் என்னதான் செய்வாள். ஒரு பக்கம் வீட்டு வேலை, குழந்தைகள், ஒரு நடமாடும் அரைப் பிணம். மறுபக்கம், கொரியர் ஆபீஸ், அதன் பிரச்சனைகள்.
ஜன்னலின் வழியாக வந்த காற்று , என் அறைக்கதவை கொஞ்சம் அசைத்துப் பார்த்து விட்டு, சற்றே அதை திறந்து விட்டுச் சென்றது. மகனின் குரல் அதிகரித்தது, நான் தான் பிரச்சனை என்று எனக்குப் புரியவே சில நிமிடங்கள் ஆனது. என்னால் அசிங்கப்படுவது என் மனைவிக்கு வேண்டுமானால் பழகி இருக்கலாம், ஆனால் இள ரத்தம் அவன். தப்பே செய்யாமல் அவமானப் பட்டு வந்திருக்கிறான். அவன் கத்துவதைப் பார்த்து, என் பத்து வயது மகள், ஓரமாக கால்களுக்குள் முகத்தை புதைத்தபடி , காதில் கை வைத்து குந்தியிருந்தாள். என்னால் தான் எவ்வளவு பிரச்சனை இவர்களுக்கு.
“ அவர் ஏன் ரூம்ல தூங்காம, இங்க வந்தாரு? கைய வச்சுக்கிட்டு சும்மா இருக்காம, இப்ப பாரு “
என்று ஏதேதோ சொல்லி கத்திக்கொண்டிருந்தான். அவன் குரல் உடையப்போகும் ஒரு அணையின் கடைசி விரிசல்களில் இருந்து வரும் காற்றைப் போல இருந்தது. அவன் கண்கள் இந்நேரம் கலங்கி இருக்கும் .
நேராக அவன் காலில் விழுந்து என்ன மன்னிக்ச்சுடுப் பா என்று கதற வேண்டும் போல இருந்தது. என் மகளை அள்ளி வாரி ,” ஒன்னும் இல்லடா செல்லம், அப்பா இருக்கேன்ல“ என்று சமாதானப் படுத்த வேண்டும் என்று தோன்றியது.
என் மொட்டைக் கால் முட்டிகளுக்கு, முகங்கள் வந்து,அவை என்னைப் பார்த்து சிரிப்பதைப் போலத் தோன்றியது. கட்டில் ஓரத்தில் இருந்த ஊன்றுகோள்களும் சேர்ந்து கொண்டு சிரித்தன . என் கை எலும்புகள் இனி ஊன்றுகோலைத் தாங்காது என்று டாக்டர் கொடுத்த பேப்பர் பறந்து வந்து என் முகத்தில் வருடிவிட்டு சுதந்திர மாக நடமாடியது . கீழ் தளத்தில் இருந்த என் சக்கர வண்டி கூட என்னைப் பற்றி யோசித்து சிரித்திருக்கும்.
அறையின் வெளியே ஏதோ போட்டு உடைக்கும் சத்தமும், என் மனைவி மகனை அடிக்கும் சத்தமும், அவன் கதவை படார் என்று சாத்தி விட்டுச் செல்லும் சத்தமும் வரிசையாகக் கேட்டன.
மின்சாரம் நின்றது.
கருப்பு ஆடு என் அறைக்குள் சத்தமாக மூச்சு விடுவதை போல கேட்டது. காதைப் பொத்திக் கொண்டு படுத்து விட்டேன்.
**
என் மகன் என்னுடன் பேசிப் பல நாட்கள் ஆகிவிட்டன. என் தனிச் சிறையில் நானும் இந்த கருப்பு ஆடும், சிறகில்லா என் ஊன்றுகோல்களும் ஒருவரை மற்றவர் பார்த்தபடியான நாட்கள் . என் குடும்பம் அவரவர் ஜோலியை பார்க்க சென்று விட்டால் , நிசப்தமும் எங்களுடன் சேர்ந்து கொள்கிறது . ஒரே கனவு, வேறு வேறு ரூபங்களில் வந்து என் நித்திரையை கெடுக்கிறது . உனக்கு நித்திரை ஒரு கேடா என்று அந்தக் கருப்பு ஆடு என் எதிரில் இருக்கும் சேரில் கால் மேல் கால் போட்டு அதன் மேல் கைகளைக் குவித்து என் நிலையைப் பார்த்து தினமும் சிரிக்கிறது.
என் மனைவி அவ்வப்போது அறைக்கு வரும் நேரங்களில் மட்டுமே நான் உயிருடன் இருப்பதாக உணர்கிறேன் . இப்படியாக இரண்டு வாரங்கள் ஓட, அந்தக் கருப்பு ஆடு வெற்றி கொண்ட அந்தத் தினம் வந்தது .
அது ஒரு மங்கலான தை சனிக்கிழமை. மகன் காலையில் பேட்டைத் தூக்கிக் கொண்டு விளையாடச் சென்று விட்டான் . மனைவி காய்கறி வாங்க வெளியே சென்றால் . என் மகளுக்கு வெளியே சென்று விளையாட ஆசை . அவள் அம்மா விட மாட்டாள் . பெண் பெரியவள் ஆகப் போகிறாள் , ஏதும் பிரச்சனை வரலாம் என்ற பெண்களுக்கே உண்டான உள் மனதின் கட்டளையாக இருக்கலாம் . ஆனால் விதி யாரை விட்டது .
“அப்பா ,நான் கொஞ்ச நேரம் விளாடிட்டு வரட்டா , அம்மா வரதுக்குள்ள வந்துடுவேன் “ என்று பாதி திறக்கப்பட்ட கதவின் பின்னால் நின்றபடி கெஞ்சியது அந்த மான் குட்டி .
என்னுடன் மகள் பேசுவதே அரிது . அவள் கேட்டு என்னால் முடிந்தால் இந்த யுகத்தையே நிறுத்தி வைத்து விடுவேன் . விளையாடத் தானே கேட்கிறாள் .
“சரிம்மா, பார்த்து போயிட்டு வா “ என்பதைத் தாண்டி என்னால் வேறு என்ன சொல்ல முடியும் .
இதோ அந்த மான் குட்டி துள்ளிக் குதித்த படி , கீழே பாண்டி விளையாடிக் கொண்டிருக்கிறது., அடுத்து சில வருடங்களில் பெரியவள் ஆவாள் , பின்னர் படிப்பு முடிந்து கல்யாணம். பின்னர் அவளுக்கென்று ஒரு குடும்பம் வாழ்க்கை .
இதெற்கெல்லாம் காசில்லை என்று அந்தக் கருப்பு ஆடு இடை மறித்துச் சொன்னது .
உண்மைதான் . என் புத்தகங்களில் பாதியை நாட்டுடைமை ஆக்கித் தருவதாக பதிப்பார் சொல்லி இருக்கிறார். சில லட்சங்கள் வரை வரும் . அதை வைத்து ஒப்பேற்றி விடலாம் என்ற மனக் கணக்கு . பார்ப்போம் .
பெண் பிள்ளைகளுக்கு ஆண்டவன் பிறக்கும் போதே ஒரு எக்ஸ்பைரி தேதி போட்டே தருகிறான் . எப்படி ஒவ்வொரு நொடியும் மரணத்தை நோக்கி என்னை நகர்த்துகிறதோ அதே போல என் மகளும் ஒவ்வொரு நொடியும் யாருக்கோ மனைவியாவதற்கோ , அம்மா ஆவதற்கோ, இல்லை இதெல்லாம் இல்லாமல் .. அதற்கு மேல் என் சிந்தனைகள் நகரவில்லை .
கீழே விளையாடிக் கொண்டிருந்த என் மகளுக்கு அருகில் ஒரு நரி வருகிறது . அவன் என் மகளிடம் எதி செய்ய முயல்கிறான் , அவள் நகர்ந்து செல்கிறாள் . அவன் அவள் மேல் கை வைத்து தடவிப் பார்க்கிறான் . அடி பட்ட மானைப் போல அவள் அங்கிருந்து நகர்கிறள்.
என் முட்டிகள் துடிக்கின்றன . கீழே சென்று அவனை தூக்கிப் போட்டு சாத்து என்று கெஞ்சுகின்றன . என்னால் நகர முடியவில்லை . கத்திக் கூச்சல் போடத் தெரியவில்லை . ஊன்றுகோல் இரண்டை தூக்கி ஜன்னல் வழியாக அவன் மேல் போட முயன்று தோற்கிறேன் . என் மகள் அழுதபடியே படிக்கட்டில் ஏறுகிறாள் . வெற்றுப் பிணமாக அவளை சூறையாடிய நரி எங்கே செல்கின்றன என்று என் கண்கள் அழுதபடி தேடுகின்றன. என் எதிரில் இருந்த கருப்பு ஆடு என் அறையை விட்டு நகர்கிறது.
என் வீட்டு கதவு திறக்கும் சத்தம் கேட்கிறது, கால் உடைத்த மான் குட்டி நொண்டிக் கொண்டே வந்து என் கதவின் பின்னால் நிற்கிறது .
அவளிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் நான் ஜன்னலை சாத்தி விட்டு அழுத படி உட்கார்ந்து இருக்கிறேன்.
“அப்பா “ , அவள் குரல் உடைந்திருக்கிறது . அழுது முடிக்காத குரல் .
“ சொல்லுடா செல்லம் “
“கீழ நடந்தத்த, அம்மா கிட்ட சொல்லிடாத, அடிப்பாngga “ என்றால்
எனக்கு அப்படியே எழுந்து அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட வேண்டும் போலிருந்தது . என் உடலைக் கிழித்து என் இதயத்தை அவள் காலடியில் போட்டு , அவளை சாந்தப்படுத்த வேண்டும் என்று தோன்றியது . நான் வாய் திறக்கும் முன் அவளே
“நான் அண்ணன் கிட்ட சொல்றேன்பா , அவன் பார்த்துப்பான் “
ஏனோ ஒரு அல்ப சந்தோசம் வந்தது . நான் கையலாகதவன் என்பதை என் மகள் எவ்வளவு தெளிவாகச் சொல்லிவிட்டாள் . என்னால் முடியாததை என் ரத்தம் பார்த்துக் கொள்ளும் என்ற நினைப்பு நிம்மதியை தந்தது . இங்கே என் தேவை தீர்ந்துவிட்டது என்று அந்த கருப்பு ஆடு ஜன்னல் வழியாகச் சொன்னது.
என் வாழ்க்கையின் கடைசி கடிதத்தை கடவுளுக்கு எழுத ஆரம்பித்தேன்
***
கொஞ்சம் கூட அன்பும் கருணையும் இல்லாத கடவுளுக்கு , வணக்கம். நீங்கள் நலம் என்று நம்புகிறேன் . நானும் என்னைப் போன்ற அற்பப் பதர்களும் எப்படிப் போனால் என்ன , இந்த உலகமும் பிரபஞ்சமும் உங்கள் தாயக் கட்டைகள். எங்களை வைத்து நீங்கள் விளையாடும் விளையாட்டு உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று நினைக்கிறேன்.
முதலில் சிலவற்றை தெளிவு படுத்த விழைகிறேன் . என்னைப் போன்ற ஆட்கள் இந்த உலகத்தில் இருந்து என்ன பயன் . என் ஊனத்தை வைத்து எத்தனையோ இடங்களில் கரிசனத்தை எதிர்பார்த்திருக்கிறேன் . சில இடங்களில் அது நடக்காத பட்சத்தில் சாபம் வைத்திருக்கிறேன் . எனக்கான தேவை இந்த உலகத்தில் முடிந்துவிட்டது என்று நேற்று என் மகள் சொல்லாமல் சொல்லிவிட்டாள் . இதற்கு மேலும் இந்த உலகத்தில் நான் இருக்க விரும்பவில்லை . எனக்கு மோட்சம் எல்லாம் வேண்டாம் , இந்த இயலாமை எனும் வலியுடன் பல ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன் ! இதற்கு மேலும் மற்றவருக்கு சுமையாக இல்லாமல் என் கணக்கை முடித்து விடுங்கள் .
வேடிக்கை என்னவென்றால் இதில் கூட என் இயலாமை வெளிப்படுகிறது பாருங்கள் . என்னால் இதோ இங்கே இருக்கும் கத்திரிக்கோலால் என்னை நானே கிழிக்துக் கொள்ள முடியும் . ஆனால் சூசைட் அது இது என்று என் மனைவி மக்களை இழுத்து அடிப்பார்கள் . போதும் கொஞ்சம் அவர்களும் நிம்மதியாக இருக்கட்டும். நான் அழுது கொண்டிருப்பது என் கடிதத்தில் விழுந்த நீர் சொட்டுகளின் வழியாகத் தெரிந்தது .
என் அறை பிரகாசமாக மாறியது . பேரண்டத்தின் பெருவெடிப்பு சிறியதாக என் ஜன்னலில் தோன்றியது . அது எல்லா பக்கங்களில் இருந்த எல்லாவற்றையும் சுவீகரிக்க தொடங்கியது . அதிலிருந்து ஒரு ஜோதி பறந்த படி என் மேஜையில் வந்து அமர , அதிலிருந்து வெளிய வந்த கருப்பு ஆடு என் நாற்காலியை கெட்டியாகப் பிடித்து கொண்டு நின்றது.
அந்த ஜோதி “ உன் பின்னால் நிற்கும் அந்த ஆட்டின் பெயர் கலி, அவனுக்கு நான் இந்த உலகையும் , அண்டத்தையும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளேன் - அவனின்றி அணுவும் அசையாது , நீ எனக்கு எழுதி எந்தப் பயனும் இல்லை “ என்று சொல்லி விட்டு மறைந்தது .
என் நாற்காலியை பிடித்துக் கொண்டிருந்த ஆட்டின் தோலைக் கிழித்துக் கொண்டு , நெற்றியில் பெரும் கொம்புடன் , ஒரு கருப்பு உருவம் என் பக்கத்தில் வந்து அமர்ந்தது .
“இந்த பேரண்டமும் அதன் அத்தனை ஜீவராசிகளும் எனக்கு பட்டயமாகக் கொடுக்கப்பட்டு விட்டது , நான் அவற்றை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் தெரியுமா “ என்றது .
“உனக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை எனக்கு செய்து விடு , இந்த உலகை விட்டு விடு “ என்று நான் கெஞ்சினேன்
“இதோ மறைந்ததே இந்த ஜோதி , அது தான் நீங்கள் தினமும் பல ரூபங்களில் வழிபடும் கடவுள் , அது உங்களை எல்லாம் சூதாட்டத்தில் இழந்து விட்டது தெரியுமா? “
“அவருக்கு அதைத் தவிர வேறென்ன தெரியும் “ ஏனோ எனக்கு கலியுடன் பேச பிடித்திருந்தது .
“உன்னை நான் நெடுநாளாக கவனித்து வருகிறேன் , இந்த உலகத்தில் நொண்டியாகப் பிறந்ததை விட நீ பெரிய தவறொன்றும் இழைக்கவில்லை , மரணத்தை பற்றிய பயமின்றி இருக்கிறாராய், நித்தமும் அவமானப் படுகிறாய் , அதனால் உனக்கு ஒரு வரம் தருகிறேன் , என்ன வேண்டுமோ கேள் ! எனக்கு பிடித்திருந்தால் தருகிறேன் “ கலி இப்போது இரண்டு கால்களையும் தூக்கி என் மேஜையில் வைத்த படி கேட்டது .
”வரத்திற்கு முன்னால் , சில கேள்விகள்” என்று ஆரம்பித்தேன்
“இந்தப் பிரபஞ்சத்தில் எத்தனையோ கோடி உயிரினங்கள் உள்ளன . அவற்றின் தேவை என்ன? நாங்கள் இங்கே என்ன செய்து கொண்டிருந்தோம் ? எங்களின் பொருள் என்ன? எதற்கும் விடை தெரியாமல் நாங்களும் வாழ்கிறோம், மடிகிறோம் . ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொண்டு சிலர் பேரும் பணத்தொடும், சிலர் முழு உடலோடும் , சிலர் என்னைப் போன்று சிலர் அரைகுறை உடம்போடும் சுற்றித் திரிகிறோம். எனக்கும் , பூட்ஸ் கால்களால் மிதி பட்டுச் சாகும் புழுவிற்கும் உள்ள தொடர்பு என்ன . உங்களின் பொழுது போக்கிற்கு எங்களை வைத்து நீங்கள் செய்யும் சூதாட்டத்தை தவிர இது வேறு எதுவாக இருக்க முடியும்?
இந்தப் பிறவியில் இருந்து எனக்கு விடுதலை வேண்டும். எனக்கும் மட்டுமல்ல இந்த மானுடத்திற்கே விடுதலை வேண்டும் . அதற்காக இங்கே இருக்கும் அனைத்து அசுத்தங்களை களைய விரும்புகிறேன் . எல்லோரின் தவறுகளையும் எனதாக்கிக் கொள்கிறேன் . “
“உன் மகள் சீண்டப்பட்டாள், நீ கையேந்தி பலரிடம் பிச்சை எடுத்தத்தை அனைவரும் கேலி செய்தனர் , இவர்களையா மன்னிக்கப் போகிறாய் . ஒரு வார்த்தை சொல் , அவர்களுக்கு நித்தம் ஒரு சோதனை தந்து , துன்பத்தில் ஆழ்த்தலாம்” என்றான் கலி.
என் மகளை சீண்டிய அந்த பையனை மன்னித்து விடுகிறேன் . எனக்கு ராயல்டி தராமல் ஏமாற்றும் பதிப்பகத்தை மன்னித்து விடுகிறேன் . இந்த உலகத்தில் உள்ள அனைவரின் பாவ மூட்டைகளை நான் சுமக்கிறேன் . இந்த நொடியில் மரணிக்கும் அத்தனை பேரின் அசுத்தங்களை நானே ஏற்கிறேன் .இதன் பிறகு பிறக்கும் அனைவரின் பாவங்களையும் எனக்கே தாருங்கள் . மொத்தத்தில் அண்டம் பிறந்ததிலிருந்து நடந்த அத்தனையும் என்னுடையது !
பதிலுக்கு நான் கேட்பது இது தான்
எல்லா உயிரினங்களும் நிம்மதியாக , சமமாக , ஆரோக்கியமாக , வன்மம் இல்லாமல் , வர்க பேதமின்றி , உல்லாசமாக இருக்கும்படி இந்த உலகை மாற்றுங்கள் .
இது தான் உன் வரமா?
ஆமாம்
“நீ இப்போது வரலாம் “ என்றது கலி.
அந்த ஜோதி மறுபடியும் உதயமானது .
“நீ கேட்டது எல்லாம் தருகிறேன் , பதிலுக்கு உன் மகளைத் தர வேண்டும் “ என்றான் கலி .
எனக்கு ஜெஞ்சு அடைத்து , மூச்சு விட சிரமம் ஆனது . முடியாது என்று சொல்ல வாய் எடுத்தவனை ஏதோ தடுத்தது .
“ இந்த அண்டம் அந்த ஜீவ ராசிகள் அத்தனையும் உனக்கு , ஆனால் உன் மகள் உனக்கல்ல “ சொல் என்ன வேண்டும் .
எனக்கு உன் வரமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் , நீ என்னை விட பெரிய ஊனி. உன்னைப் போன்ற ஒருவனிடம் என் மகளைத் தரவே மாட்டேன் .
எது நடந்தாலும் தர மாட்டாயா ?
மாட்டேன்
எங்கள் முன்னாள் ஒரு திரை விரிந்தது .
ஜப்பானியக் கடலில் சுனாமி அலை அதில் தெரிந்தது .
உன்னால் , கோடி மக்கள் இறக்கப் போகிறார்கள் , அத்தனை பேரின் பாவத்தை ஏற்றாயே, இதையும் சேர்த்து ஏற்றுக்கொள்.
அந்த அலை பெரிதாகி கரையில் இருந்த மக்களையும் , அதன் உயர்ந்த கட்டிடங்களையும் விழுங்கியது . அது நடந்து முடிந்து மக்களின் அபலக் குரல் கேட்டது.
அடுத்து ஆசியாவை முழுக்கப் போகிறது பார் என்றது .
மகளா இல்லை மக்களாம் என்ற தர்க்க யுத்தம்
எல்லாம் உன்னால் தான் , ஏதோ உலகின் அத்தனை பாவங்களையும் ஏற்றுக் கொள்கிறாய் என்றாயே? ஒரு சிறு பாவத்தை செய்ய மறுக்கிறாய்? இதனால் தான் நீ மனிதன், நான் உங்களுக்கெல்லாம் மேல்! கடைசியாகச் சொல் , உன் மகளா இந்த உலகா?
என் ரத்தத்தை எழுதிக் கேட்கிறாய்! இந்த உலகம் எனக்கு அவமானத்தைத் தவிர எதையும் தந்ததில்லை . இது ஒரு பாவப்பட்ட இடம் , அகமொன்றும் புறமொன்றும் பேசி மக்கள் நடிக்கும் இடம். சரி தவறு என்று அவர்களுக்குமான விகிதாச்சாரங்கள் மாறுகிறதே தவிர , அனைவருக்குள்ளேயும் அதே வன்மம் இருக்கக் தான் செய்கிறது . இங்கே என் மகள் இருந்து என்ன இல்லாவிட்டால் என்ன ?
அப்போ மகளைத் தருவர்த்தக்கு ஒப்புக் கொள்கிறார்கள்?
எனக்கு என் மகள் , குடும்பம் தான் உலகம் . உனக்கு என்ன செய்ய வேண்டுமோ செய் ! ஆனால் என் குடும்பம் என்னுடையது . இந்த உலகத்தின் அத்தனை பேருக்கும் என்னவோ அவர்களுக்கும் அதுவே! எங்களைக் கொன்று விட்டு நீயாவது சந்தோசமாக இரு !
கொள்வதா! நீ செத்த பிறகு என்ன நடக்கப்போகிறது என்று பார்! உன் மகன் குடிக்கு அடிமையாகிறான். உன் மகளுக்கு வாய்த கணவன் அவளை நித்தமும் இம்சிக்கிறான். உன் மனைவி முதியோர் இல்லத்தின் மூலையில் , மூத்திர வாடை அடிக்கும் புடவையுடன் அடுத்த வேலை சோற்றுக்கு திண்டாடுகிறாள் ! இதற்கெல்லாம் காரணம் நீயா இல்லை நானா?
நான் கலியிடம் சொன்னேன் ! நீ சொன்னது அனைத்தும் நடக்க வாய்ப்பிருக்கிறது . ஆனால் அது நடக்காது. என் மனைவியை , அவர்களின் அம்மாவை அவர்கள் ஒருபோதும் விட்டுத் தர மாட்டார்கள் . என் மனைவி இருக்கும் வரை இந்த குடும்பம் நிலை குலையாது! அவளின் வளர்ப்பு அப்படி!
இந்த மனிதர்களும் அவர்களின் நம்பிக்கையும் முதலில் அறுத்தெறிய வேண்டும் . என்ன செய்கிறேன் பார்!
என் மகள் என் முன்னால் தோன்றினாள் . இவளை இங்கேயே கொல்லப் போகிறேன் பார் என்றான் . நான் பதில் ஏதும் தராமல் இருக்க , என் குடும்பத்தை கூட்டி வந்து கழுத்தறுதான் . என் அறையில் ரத்த வாடை வீசியது. அழுது துடிப்பேன் என்று நினைத்த எனக்கு , சில சொட்டு கண்ணீர் மட்டுமே வந்தது .இதெல்லாம் கனவாக இருக்கக் கூடும் என்று மனம் சாந்தப் படுத்தியது.
கலி குழப்பமுற்றான். இப்போது உனக்கென்று யாரும் இல்லை என்னையும் நீ மன்னித்து விட்டாயா?
ஆமாம் , என் கண் முன்னால் என் குடும்பம் சூறையாடப் படுவதை விட , இதுவே மேல்! உன்னையும் உன் பாவங்களையும் நான் சுமக்கிறேன்! பிழைத்துப் போ !
அந்த ஜோதி பெரிதாகிக் கொண்டே போனது . அதன் ஒளி நூறு கோடி சூரியனின் பிரகாரத்தை தந்தது .
கலி உருக ஆரம்பித்தான். பெருங் கூச்சல் அந்த இடந்தை நிரப்பியது .
அந்த ஜோதி என்னை கை பிடித்து எங்கோ அழைத்துச் சென்றது .
கலியுகம் முடிந்தது.
0 Comments:
கருத்துரையிடுக